போலந்து நாட்டில் தமிழக இளைஞர் மர்ம மரணம் - தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை!!
போலந்து நாட்டில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்க தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை இளையான்குடி தாலுகா பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவரின் மகன் சதீஷ்குமார் போலந்து நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவி உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டில் வேலைக்காக சென்று உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வார்சோவா பகுதியில் சதீஷ்குமார் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் , இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து தனது மகன் உடலை சொந்த ஊருக்குகொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தந்தை வீரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.
போலந்து நாட்டிற்குப் பணிபுரிய சென்ற சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், பஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயா வீரபாண்டி - செல்லம்மாள் இணையரின் மகன் சதிஷ்குமார் அவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். @CMOTamilnadu @mkstalin pic.twitter.com/gDVnswyb7v
— சீமான் (@SeemanOfficial) March 16, 2022
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "போலந்து நாட்டிற்குப் பணிபுரிய சென்ற சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், பஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயா வீரபாண்டி - செல்லம்மாள் இணையரின் மகன் சதிஷ்குமார் அவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தமிழ்நாடு அரசு, போலந்து நாட்டிலிருந்து தம்பி சதிஷ்குமாரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உரிய விசாரணை நடத்தவும் இந்தியத் தூதரகத்தின் வழியே போலந்து அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அன்பு மகனை இழந்து துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.