நெல்லையில் திரளும் தாமரைச் சொந்தங்களை காண பேராவல் - நயினார் நாகேந்திரன்..!!

 
nainar nainar


திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது பாஜகவின் மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான அண்ணன் திரு. இல. கணேசன் அவர்களின் மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்த, “திருநெல்வேலி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக சார்பாக முதன்முறையாக நடைபெறவிருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில், நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார் என்பது நமக்கான கூடுதல் நற்செய்தி. தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காகவும், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் நமது தாமரைச் சொந்தங்களுக்கு, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களின் வருகை புத்துணர்வு அளிக்கும் ஒன்று. 

amit shah

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தின் 6 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்குள் உள்ள மொத்தம் 8,595 பூத்துகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இதில் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மீண்டுமொருமுறை அன்புடன் அழைக்கிறேன். தமிழக அரசியலின் கள நிலவரம், நமது எதிர்கால செயல்திட்டங்கள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படவிருக்கும் இம்மாநாடு, நமக்கான வரப்பிரசாதம்.

 மேலும் எனதருமை தாமரைச் சொந்தங்களே, இந்த மாநாட்டை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டுமே இல்லாமல், தமிழகம் கண்டு வியந்த மாபெரும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்களில் ஒருவரும், வாழ்க்கையின் துக்கங்களைத் துறந்து நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருமான அண்ணன் திரு. இல. கணேசன் அவர்களின் மக்கள் சேவைக்கு நாம் அளிக்கும் மணிமகுடமாக மாற்றுவோம். அன்னாரின் தியாகம், எளிமை, ஒழுக்கம், தேசப்பற்று, தமிழுணர்வு, சமூகசேவை உள்ளிட்ட அனைத்து நற்குணங்களும் என்றென்றும் நம்மை நற்பாதையில் வழிநடத்தும். ஆகவே, திருநெல்வேலி பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டை வெற்றியடையச் செய்வது, அன்னாரின் உயர்ந்த சிந்தனைகளை நாம் பின்பற்றுகிறோம் என்பதற்கான உண்மையான சான்று. எனவே, மறைந்த அண்ணன் திரு. இல. கணேசன் அவர்களின் சீரிய சிந்தனைகளை முன்னிறுத்தி, அலைகடலென நெல்லை மண்ணில் ஆர்ப்பரிப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.