சிபிஐ தலைவர் நல்லக்கண்ணு 97வது பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து..

 
நல்லக்கண்ணு

விடுதலைப் போராட்ட வீரரும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு ஐயா இன்று (டிச 26)  தனது  97- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி  சென்னையில் உள்ள அவரது இல்லத்திலும்,  சிபிஐ அலுவலகத்திலும்  தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவில், “ பொதுவாழ்வில் தூய்மை, எளிமை ஆகியவற்றுக்கான குறிச்சொல்லாக மாறிவிட்ட மாபெரும் பொதுவுடைமைப் போராளி தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 97-ஆவது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன். இன்னும் பல்லாண்டுகள் தம் சிந்தனைக்கொடையால் நம் தமிழ்ச்சமூகத்தை அவர் செறிவூட்டட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

நல்லக்கண்ணு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்லக்கண்ணு அவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,  80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும், விடுதலைப் போராட்டம், ஏழை - எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டம், தமிழ்நாட்டின் வளங்களை காப்பதற்கான போராட்டம் என உழைத்துக் கொண்டே இருப்பவரும், சிறந்த பொதுவுடைமைவாதியுமான அன்புக்குரிய பெரியவர் திரு.R.நல்லக்கண்ணு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். சிறந்த உடல்நலத்தோடு இன்னும் பல ஆண்டு காலம் அவர் மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எளிமையின் மறு உருவமாகத் திகழும் மரியாதைக்குரிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் திரு.இரா.நல்லக்கண்ணு அவர்களின் பிறந்த நாளான இன்று, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணிபுரிய வேண்டுமென்ற எனது விருப்பத்தினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.