நீட் விவகாரத்தில் திமுக சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - நாராயணன் திருப்பதி கேள்வி

 
narayanan stalin

இதுவரை நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக சட்ட ரீதியாக உச்சநீதி மன்றத்தில் என்ன, எப்படி, எப்போது முறையிட்டுள்ளது என்று கூற முடியுமா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1118 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 5473 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல் பிரதமரும் பேசியிருக்கிறார். அதற்கு நான் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டேன். இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சியில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தர இயலவில்லை. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடியவில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது அரசின் கடமையும் அல்ல, உரிமையும் அல்ல. கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டிய மாநில அரசு நிர்வாகத்தை தட்டி பறித்து கொண்டு தாங்கள் செய்ததாக மார் தட்டி கொள்வது சட்ட விரோதம். உங்கள் அரசு மீட்டதாக சொல்லும் நிலங்கள், நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் தீர்ப்புகளினாலே தான் மீட்கப்பட்டது என்ற உண்மையை உலகிற்கு சொல்லாமல், அரசே மீட்டது என்று சொல்வது தவறு. பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள  ஏகாம்பரநாதர் கோவில் நிலங்கள், மற்றும் மயிலாப்பூர் பி.எஸ். 


உயர்நிலை பள்ளி மைதானம் உட்பட பல்வேறு நிலங்களின் வழக்குகள் முடிந்து அந்தந்த கோவில்களுக்கு குத்தகைதாரர்களால் ஒப்படைக்கப்பட்டன என்பதே உண்மை. தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மாநில அரசின் ஒப்புதலோடு ஜப்பானின் JICA நிறுவனத்தின் நிதியுதவியோடு கட்டப்படும் என்று  என்று தெரிந்தும் தொடர்ந்து தவறான பிரச்சாரத்தை மேற்கொள்வது முதல்வருக்கு அழகல்ல. நீட் தேர்வை நடத்த வேண்டும் என் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதை நடத்த வேண்டும் என சட்டம் கொண்டு வந்தது பாராளுமன்றம். இது வரை நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தி மு க சட்ட ரீதியாக உச்சநீதி மன்றத்தில் என்ன, எப்படி, எப்போது முறையிட்டுள்ளது என்று கூற முடியுமா முதல்வர் அவர்களே? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.