இந்தியை திணித்த காங்கிரஸ் உறவை துண்டிக்க திமுகவுக்கு துணிச்சல் இருக்கா? - நாராயணன் திருப்பதி

 
 பாஜக நாராயணன் திருப்பதி

இந்தியை இந்தியாவில் திணித்த காங்கிரஸ் கட்சியின் உறவை துண்டிக்க தி.மு.க.வுக்கு துணிவிருக்கிறதா? திராணியிருக்கிறதா? என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழகத்துக்கு வந்தால், தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டில்லிக்கு சென்றதும் நஞ்சை பரப்புவதும் பாஜகவின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்" என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள். டில்லியில் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை அறிமுகப்படுத்தி விட்டு, எதிர்கட்சியானதும் நீட் தேர்வை எதிர்த்ததும், டில்லியில் ஆட்சியில் இருந்த போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு, எதிர்கட்சியானதும் குய்யோ முறையோ என கதறியதும், டில்லியில் ஆட்சியில் இருந்த போது காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இணைத்துவிட்டு ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணமாய் இருந்து விட்டு, எதிர்கட்சியானதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியதும், எதிர்க்கட்சியாக இருந்த போது எட்டுவழி சாலையை எதிர்த்து அறிக்கை விட்டு விட்டு, ஆளும் கட்சியான பின்னர் எட்டு வழி சாலையை எதிர்க்கவேயில்லை என்று தடம் புரள்வதும், எதிர்க்கட்சியாக இருந்த போது டாஸ்மாக்கை எதிர்த்து குரல் கொடுத்து விட்டு, ஆளும் கட்சியான பின்னர் டாஸ்மாக்கை மேலும் நவீனமயமாக்கி, டாஸ்மாக் வருமானத்தை பெருக்க திட்டமிடுவதும் என இது போன்ற பல்வேறு விவகாரங்களில் அந்தர் பல்டி அடித்து, எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேனை நாக்கில் வைத்து கொண்டு பேசுவதும், ஆளும் கட்சியான பின்னர் நஞ்சை நாக்கில் வைத்து கொண்டு பேசுவதும் தான் தி மு கவின் பசப்பு, கசப்பு, நயவஞ்சக அரசியல்.


பாஜகவின் தாய் இயக்கமான ஆர் எஸ் எஸ் தோன்றிய காலம் முதல் இந்தியர்கள் அனைவரும் தங்களின் தாய் மொழி வாயிலாகவே கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தி வருவது பாஜகவின் கொள்கை. ஹிந்துஸ்தானி, தமிழ், சமஸ்க்ரிதம் போன்ற பல்வேறு மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என பல குரல்கள் அரசியல் நிர்ணய சபையில் ஒலித்த போது, குறிப்பாக டாக்டர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஹிந்தியை அலுவல் மொழியாக்கி அதை அரசியலமைப்பு சட்டத்தில் உறுதியாக்கி, ஹிந்தியை இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்கிய காங்கிரஸ் என்ற நஞ்சோடு தமிழ் என்ற தேனை கலந்து, தமிழ் தேனை நஞ்சாக்கியது தி மு க தானேயன்றி வேறு யாரும் அல்ல. 

அரசியலுக்காக தமிழ், தமிழ் என்று புலம்பி விட்டு, ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக ஹிந்தி, ஹிந்தி என்று ஓலமிட்ட காங்கிரசுடன் இணைந்து தேனை நஞ்சாக்கியது தி மு க தான் என்பது நாடறிந்த உண்மை. ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் தென் இந்திய மொழிகளை கற்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர்கள் ஹிந்தி கற்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததோடு, மும்மொழிக்கொள்கையை ஹிந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தி விட்டு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் தென் இந்திய மொழிகளை குறிப்பாக தமிழ் மொழியை அமல்படுத்தாத காங்கிரஸ் கட்சியோடு கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பது தி மு க தான். 

தி மு க வுக்கு மொழிப்பற்று இருப்பது உண்மையென்றால், தமிழின் எதிரியான, ஹிந்தியை இந்தியாவில் திணித்த காங்கிரஸ் கட்சியின் உறவை துண்டிக்க தி மு க வுக்கு துணிவிருக்கிறதா? திராணியிருக்கிறதா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.