காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்கியதா? - நாராயணன் திருப்பதி கேள்வி

 
narayanan thirupathy

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு முறையாக பேரிடர் நிதியை வழங்கியதா? என தமிழக பாஜக துணை தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த வருடம் தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 900 கோடியும், நகர்ப்புற வெள்ள தடுப்பு மேலாண்மை நிதிக்காக ரூபாய் 561.29 கோடியும் ஏற்கனவே கொடுத்து விட்டது மத்திய அரசு. மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து முழு ஆய்வும் செய்து தரவுகளை மாநில அரசு விரைவில் அளித்தால் தேசிய பேரிடர் நிவாரண நிதி அல்லது உரிய துறைகளின் மூலம் நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.


தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்த போது (2012-13) அன்றைய தமிழக மாநில அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 19,665 கோடி ரூபாய் வழங்குமாறு கேட்டும், அன்றைய தி மு க - காங்கிரஸ்  அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 121 கோடி மட்டுமே அளித்ததோடு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து  ரூபாய். 624 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியது ஏன் என்ற கேள்விக்கான பதிலை சொல்லி விட்டு தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும்,  தி மு க வினரும் இன்றைய மத்திய பாஜக அரசின் மீது குறை சொல்லட்டும், கேள்விகளை கேட்கட்டும். மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை வஞ்சித்து ஏன்? தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஏன்? என்பதை தி மு க விளக்குமா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.