நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாவலர் இரா. நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
நாவலர் நெடுஞ்செழியன் மொழி அறிவும், அசாத்திய பேச்சாற்றலும், சமுதாய நலனும் விடாத சுயமரியாதையும் ,பகுத்தறிவும் கொண்ட கொள்கையில் லட்சியத்தில் ,இறுதி வரையில் உறுதி காத்து அயராது மக்கள் பணியாற்றி, அதன் காரணமாக தந்தை பெரியாரிடமும் , பேரறிஞர் பெருந்தகை அண்ணாவிடவும் மிகுந்த நன்மதிப்பை பெற்றதோடு, மிகவும் குறுகிய காலத்தில் இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து உச்சம் தொட்டவர்.
ஆட்சி மாற்றங்களிலும், அரசியல் மாற்றங்களிலும், மொழி போரிலும் ,மாணவர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை உணர்ந்து இருந்த காரணத்தினால், திராவிட இயக்கங்கள் ஆட்சி பொறுப்பில் அமர்ந்திட நாவலர் நெடுஞ்செழியன் பங்களிப்பும், இனமான பேராசிரியர் க.அன்பழகன் பங்களிப்பு அளப்பரியது. திராவிட கருத்துக்களை சமூக சீர்திருத்தங்களை , இளைஞர் மனதில் விதைத்திட மன்றம் என்கின்ற இதழை நடத்தி வந்தவர். இடைவிடாத அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகளுக்கு இடையிலும் அழகு தமிழில் எழுதும் பழக்கம் அதை என்றும் கைவிடாத காரணத்தால், எண்ணற்ற கதைகள், கட்டுரைகளோடு 30க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
1967 முதல் 1969வரை பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975 வரையில் கலைஞர் ஆட்சியிலும் கல்வி அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உணவு துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றினார். தான் வாழ்கின்ற காலம் வரையில் தான் கொண்டிருந்த பகுத்தறிவுக் கொள்கையை உயிர் போல் காத்து வந்தவர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் சொல்லோவியம் , நடமாடும் பல்கலைக்கழகம், நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை அறிவு சார்ந்த, தமிழ் உலகமும் திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் ,கொண்டாடி மகிழ்வோம் என அறிவித்திருந்தார். மேலும் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது நாவலர் நெடுஞ்செழியன் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன், திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.