கொரோனா அச்சுறுத்தல்: கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு...
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் குறையத்தொடங்கியதை அடுத்து கல்லூரிகள் திறக்கப்பட்டு , நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர் ஒருவருக்கு கடந்த 6ம் தேதி கொர் கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 8 மாணவர்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளானது தெரியவந்தது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தலில் இருக்கும் விடுதி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலைநிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டுமென என உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவு அருந்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து விடுதிக்கு வரும் மாணவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வருவதுடன், 14 நாட்களுக்கு பிறகே நேரடி வகுப்புகளில் அனுமதிக்க வேண்டும் எனவும், தனிமனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருப்பதை கல்லூரி நிர்வாகம் உறுதி படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.