5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். இநிலையில், 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும். சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும். ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.