புத்தாண்டு கொண்டாட்டம்: 18,000 போலீசார் பாதுகாப்பு
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. 2023 ஆம் ஆண்டு முடிவடைந்து 2024 ஆம் ஆண்டில் நாம் காலடி எடுத்து வைக்க உள்ளோம். புத்தாண்டு தினத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைகளில் கூடுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதும் வழக்கம். இந்த சூழலில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் நாளை மாலை 7 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் , கடற்கரை ஓரங்களில் குதிரை படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 420 இடங்களில் வாகன தணிக்கைக்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்; முக்கியமான 100 வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் சாகசத்தை தடுக்கும் விதமாக 25 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.