"தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை" - டிஜிபி லைலேந்திர பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை காவல்துறை தடைவிதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவியிருக்கும் உருமாறிய ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் பொதுவெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது. புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 31-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு அன்று அவசர உதவி தேவைப்பட்டால் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும், KAVALAN - SOS செயலியை பயன்படுத்தமாறும் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடனும் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றுமாறும் புத்தாண்டு தினத்தில் பொது இடங்களில் சாலை ஓரங்களில் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதிலும் தவிர்க்குமாறும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து ,ரயிலிலும் ,பேருந்திலும் பயணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள் . அதிவேகமாகவும், கவனக்குறைவும் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் இதனால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள காவல்துறை, வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால் ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.