ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் தொடங்கியது

 
Erode East

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த  4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.  முதல் வேட்புமனுவாக தேர்தல் மன்னன் பத்மராஜன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பிரிவு வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்,  வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதையடுத்து அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.