வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் : பீகார் அதிகாரிகள்,தமிழக அரசுடன் இன்று மாலை ஆலோசனை..
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்த பீகார் மாநில அதிகாரிகள் குழு தமிழகம் வருகிறது. இந்தக் குழுவுடன் தமிழக அரசு இன்று மாலை ஆலோசனை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தடுக்கப்படுவதை போலவும் ,அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனக் குறிப்பிட்டு, அண்மைக்காலமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றனர். ஆனால் அதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலோ, அச்சுறுத்தலோ தமிழகத்தில் இல்லை என்றும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எடிட்டிங் செய்து பரப்பப்படுவதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து நேற்று பீகார் சட்டசபையில், பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அம்மாநில துணை முதல்வர் இது போலியான தகவல் என்றும் இதுபோன்ற பிரச்சனை ஏதும் இருந்தால் தமிழ்நாடு அரசுடன், பீகார் அரசு ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார். அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த பீகார் மாநில அதிகாரிகள் குழு தமிழகம் வருகிறது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அலோக்குமார், பாலமுருகன் உள்ளிட்ட 4 பேர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். . இன்று மாலை சென்னை வரும் பீகார் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர், தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.