தி.மு.க. அரசின் ‘நீங்கள் நலமா’திட்டம் என்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம் - ஓபிஎஸ்

 
ops

தி.மு.க. அரசின் ‘நீங்கள் நலமா’திட்டம் என்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் கடந்த மூன்றாண்டு கால ஆட்சி என்பது சோதனைகளின் மொத்த உருவமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு என பல கூடுதல் சுமைகளை மக்கள்மீது தி.மு.க. அரசு திணித்துக் கொண்டிருக்கிறது. இது போதாது என்று விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சுமைகளை எல்லாம் சுமந்து கொண்டு மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் ஒரு முறை மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கட்டணம் ரத்து, நீட் தேர்வு ரத்து, எரிவாயு மானியம், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்ட முக்கியமான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

ops

இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்த ஆணையை நடைமுறைப்படுத்துதல் போன்றவை நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வினரின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது. போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு இலட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களை எல்லாம் வெளிமுகமை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் உரிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உரிய காலத்தில் நடத்தப்படவில்லை. முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம். மொத்தத்தில், தமிழ்நாட்டு மக்களின் நிலைமை சோதனைகள் நிறைந்ததாக காணப்படுகிறது.


இந்த நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் நிம்மதியாக வாழ்வது போலவும், விலைவாசி குறைந்துள்ளது போலவும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது போலவும், கடன் சுமைகள் குறைக்கப்பட்டது போலவும் நினைத்துக் கொண்டு 'நீங்கள் நலமா' திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்திருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 'நீங்கள் நலமா' திட்டத்தை ஆரம்பித்து இருப்பது மக்களின் சோதனைகளை, வேதனைகளை மறைக்க முயற்சிக்கும் செயல் ஆகும். மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது. வருகின்ற தேர்தலில் தி.மு.க. அரசிற்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.