பிக் பாக்கெட் அடிப்பது போன்று பொதுச்செயலாளர் பதவியை அடிக்க முயற்சி - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

 
ops

பிக் பாக்கெட் அடிப்பது போன்று அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.  வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  .அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால், அவர் போட்டியிடின்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வாகிறார்.  

panruti ramachandran

இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.  தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும். அதிமுக பொதுச்செயாலாளர் தேர்தலை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். யாரும் எதிர்ப்பாராத வகையில் தேர்தலை அறிவித்துள்ளனர். இனியும் திருந்துவார்கள் என  நினைக்கவில்லை.  படுதோல்வி அடைந்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திருந்துவதாக தெரியவில்லை. அதிமுகவை சீரழிக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். 

அவரை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அ.தி.மு.க. தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அணி மீது அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பிக் பாக்கெட் அடிப்பது போன்று பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள். உரிய விதிகளின்படி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திவில்லை.  ஈரோடு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். அ.தி.மு.க. இயக்கத்தை மீட்டெடுப்பது தான் எங்கள் இலக்கு. திமுக தேர்தலில் போட்டியிடலாமா என அண்ணா மாநாடு நடத்தி முடிவு செய்த திருச்சியில், ஏப்ரல் 2ஆவது வாரத்தில் மாநாடு நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார்.