மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம் - புகழேந்தி

 
Pugazhendi

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். 

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:   ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் கடல் அலைபோல் மக்கள் கூட்டம் வரும் காட்சியை வருகிற 24-ந் தேதி தமிழகம் பார்க்கத்தான் போகிறது. அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் மண்டல வாரியாக வர உள்ளார். சேலத்திற்கும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் வருவார். அதன்படி சேலத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் நடைபெறு.ம் இதை எடப்பாடி பழனிசாமி பொறுத்திருந்து வேடிக்கை பார்க்க வேண்டும். 

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை மரியாதையுடன் மாநாட்டிற்கு அழைத்து செல்வோம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு அன்வர் ராஜா, கே.சி.பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.