மீண்டும் ‘ஓசி’ பஸ் சர்ச்சை.. அதிகார மமதையில் மகளிரை அவமதிக்கும் திமுக - நயினார் நாகேந்திரன் தாக்கு..

 
nainar nainar

ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை  விமர்சிக்கும்  திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டனப்பதிவில், “கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்கள் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.

இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் திரு.பொன்முடி அவர்களும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.கதிர் ஆனந்த் அவர்கள் "ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் "அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ‘ஓசி’ பஸ் சர்ச்சை.. அதிகார மமதையில் மகளிரை அவமதிக்கும் திமுக - நயினார் நாகேந்திரன் தாக்கு..

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்! 

ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்? 

அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் !”என்று குறிப்பிட்டுள்ளார்.