நெல்லையில் வெயிலின் கொடூர தாக்குதலுக்கு ஒருவர் பலி!

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மயங்கி விழுந்த நரிக்குறவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ஏழுமலை (24). இவருக்கு திருமணமாகி 1 மகன் உள்ளனர். இந்நிலையில் ஏழுமலை தென்காசிக்கு போய்விட்டு ரயிலில் நெல்லை வந்துள்ளார். நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் இருசக்கர வாகன காப்பகம் அருகே உறவினருடன் வரும்போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஏழுமலையை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஏழுமலை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சந்திப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கள் வழக்கப்படி இறுதி சடங்கு செய்வதாகக் கூறி உடலை வேறு வாகனத்தில் எடுத்துச் சென்றனர். நடந்து வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.