தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்

 
assembly

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.  அதனைத்தொடர்ந்து  கடந்த 20ம் தேதி  2023 -24ம் நிதியாண்டிற்கான பொது  நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், 21ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  நேற்று  யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று தொடங்கியது. 

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த ம்சோதா ஆளுநரால் இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டது.  இதுதொடர்பாக ஆளுநர் அனுப்பிய கடிதத்தில்,  ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும்,  இந்த மசோதா சட்டப்படி எப்படி சாத்தியமாகும் என்றும்,  இந்த விவகாரம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டில் வருவதாகவும் ஆளுநர் குறிப்பட்டிருந்தார்.  இந்நிலையில்  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் இன்று  மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.