ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் திட்டவட்டம்..
ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனவும், இறுதி விசாரணையை ஏப்ரல் 20 , 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முறையிடப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று ( ஏப்ரல்12 - புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதன்படி நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும், திட்டமிட்டபடி இறுதி விசாரணை ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். ஏப்.24ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.