துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் முறைகேடு - திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் முறைகேடுகளை நிகழ்த்தியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் தலைவிரித்து ஆடும் என்பதற்கேற்ப, "Corruption, Commission, Collection" என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இப்பொழுது அதைத்தான் மேற்கொண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களிடமிருந்து தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகித்து மக்களின் பணத்தை வீணடித்ததே ஊழலுக்கு சிறந்த உதாரணம். அந்த வரிசையில், தற்போது தரமற்ற நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்ய தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.தமிழ்நாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 60,000 டன் துவரம் பருப்பு மற்றும் ஆறு கோடி லிட்டர் பாமாயில் விநியோகிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியதாகவும், இதில் கலந்து கொண்ட நிறுவனங்களில், துவரம் பருப்புக்கு மாதிரி வழங்கிய ஆறு நிறுவனங்கள் மற்றும் பாமாயிலுக்கு மாதிரி வழங்கிய மூன்று நிறுவனங்கள், ஆக மொத்தம் ஒன்பது நிறுவனங்களின் பொருட்கள் தரமற்றவை என ஆய்வு அறிக்கை தெரிவித்த நிலையில், மேல்மட்டத்திலிருந்து வந்த நெருக்கடி காரணமாக நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மாதிரிகள் மீண்டும் ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டு தரமானவை என்று பரிந்துரைக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

இதன் பின்னர் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணை நான்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் இரு நிறுவனங்களின் மாதிரி முதல் முறை தர பரிசோதனையில் தேர்வாகவில்லை என்றும், இதேபோன்று பாமாயிலுக்கான கொள்முதல் ஆணை நான்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த நிறுவனங்களுக்கும் தர பரிசோதனையில் விதிகளை மீறி சலுகை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தரப் பரிசோதனையில் தேர்வாகாத நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை மக்களுக்கு விநியோகித்தால் அவை மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், அந்த நிறுவனங்களிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்வது என்பது ஊழலின் உச்சகட்டம். ஆதாயம் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதில் தனிக் கவனம் செலுத்தி, தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும், மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


