"செய்தி கேட்டு ஆற்றொணா துயரம்... உடனே இடிச்சி தள்ளுங்க" - ஓபிஎஸ் வேதனை!
இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை கீழவெளிப் பகுதியில் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விளக்குத்தூண் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த தலைமைக் காவலருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், கண்ணனுக்கு ரூ.5 லட்சமும் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
இருப்பினும், பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகை உயர்த்தித் தரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே இழப்பீட்டினை உயர்த்தித் தர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமைக் காவலரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம், தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்து அவற்றைத் தரைமட்டமாக இடிப்பதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த விபத்திற்குக் காரணமான கட்டிட உரிமையாளரைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.