மீலாதுன் நபி பண்டிகை : ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து!!
இஸ்லாமிய பெருமக்களால் இன்று மீலாதுன் நபி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இறைத்தூதர் அண்ணல் நபிகள்நாயகம் அவர்கள் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும் சகோதரத்துவமும் நிறையவும், நலமும் வளமும் பெருகவும் வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பார்ந்த மீலாதுன்நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "இறைத்தூதர் முகமது நபிகள் பிறந்த நன்னாளை இறை உணர்வோடு கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது உளங்கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள். உலகெங்கும் அமைதி நிலவி, சகோதரத்துவமும், அன்பும் பூரணமாக நிறையட்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "உலகமெங்கும் மானுடத்தை வழிநடத்தும் மகத்தான போதனைகளை அருளிய மாமனிதர் நபிகள் நாயகம்.வாழ்வில் ஏற்படும் சோதனைகளை கடந்து வருவதற்கான போதனைகளை வழங்கியவர். பெண்மையை உயர்வு செய்தவர். உழைப்பவரின் வியர்வை காய்வதற்குள் அவருக்கான ஊதியத்தை கொடுத்து விடுங்கள் என்று உழைப்பை மதிக்க கற்றுக் கொடுத்தவர். இறைவன் உங்கள் பக்கம் இருக்கும்போது எந்த சக்தியாலும் உங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற தன்னம்பிக்கையை விதைத்தவர். நல்லிணக்கத்தை போற்றி மனிதகுலம் சிறப்படைய எண்ணற்ற நல்ல சிந்தனைகள் போதித்தவர். மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நபிகள் நாயகம் அவதரித்த இந்த நாளில் உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு “மிலாது நபி“ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.