அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு

 
ops

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

high court

இந்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இருதரப்பினரிடமும் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மாங்கள் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த இரு வழக்குகளிலும் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.