"விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்கள்" - ஓபிஎஸ் கோரிக்கை!!
விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. பண்டிகை காலம் என்பதாலும் தொடர் மழை காரணமாக விளைச்சல் வரத்து குறைவாக உள்ளதாலும் ,காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விஷம் போல் ஏறி கொண்டே செல்கிறது.
அன்றாடம் சமையலுக்கு தேவையான எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் உளுத்தம் பருப்பின் விலை கிலோவுக்கு 22 ரூபாயில் அதிகரித்துள்ளதாகவும், துவரம்பருப்பு ,பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், எண்ணெய் வகைகளின் உயர்வும் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இதர மளிகை பொருட்கள் பூண்டு, புளி, கடுகு ஆகியவற்றின் விலையும் ரூபாய் 10 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
சில பகுதிகளில் இன்னும் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விலைவாசி உயர்வு பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்பவருக்கு இந்த விலைவாசி உயர்வு கூடுதல் சுமையை செய்து கொடுத்திருக்கிறது. பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறையை ஏற்படுத்தி பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து , அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது நியாய விலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை . அப்போதுதான் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் சிறப்பாக வாழ முடியும்.
எனவே தமிழக முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி விஷம் போல் ஏறி கொண்டே செல்லும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.