தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படும் ஈபிஎஸ் - ஜே.சி.டி.பிரபாகர் குற்றச்சாட்டு

 
jcd prabhagar

தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படும் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள்ளும் சரி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வெளியேயும் சரி, தி.மு.க. செய்த தவறுகளை, தி.மு.க. தமிழ்நாட்டிற்கு இழைத்த துரோகங்களை, புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். உண்மையான புள்ளிவிவரங்களை அளித்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள். தவறான புள்ளி விவரங்களை அளித்தவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். இந்த உண்மைக் கூட தெரியாமல், அறியாமையின் காரணமாகவோ அல்லது கலைஞர் கருணாநிதியின் புகழ் பாட வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாகவோ தன் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரை அழைத்து "விவாதங்களை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிதான் நமக்கு முன்னோடி. அவர் ஒரு ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும் என்றால், . அனைத்து விபரங்களையும் கையில் வைத்தபடி பேசுவார். அதுபோல நீங்களும் எல்லாவிதமான புள்ளி விபரங்களுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்” என்று திரு. எடப்பாடி பழனிசாமி பேசியதாக நேற்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

eps

இதன்மூலம் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தி.மு.க.வின் ஊழகுழலாக செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. கச்சத்தீவு பிரச்சனையானாலும் சரி, காவேரி நதிநீர்ப் பிரச்சனையானாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சனையானாலும் சரி, மாநில சுயாட்சி குறித்த பிரச்சனையானாலும் சரி, தி.மு.க.வின் குடும்ப ஆட்சியால் மக்கள்படும் அல்லல்களானாலும் சரி, அவற்றை மக்கள்முன் புள்ளி விவரங்களோடு எடுத்துவைக்கும் துணிச்சல் பெற்ற ஒரே தலைவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புள்ளி விவர முன்னோடி என்றால் அது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அமைதிப் பூங்காவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.  மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் தி.மு.க. பார்த்துக் கொண்டபோது, புள்ளி விவரங்களை, சட்ட நுணுக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, சட்டப் போராட்டத்தின்மூலம் அதில் வெற்றி கண்டவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா

தி.மு.க.-வின் நிலையினை தோலுரித்துக் காட்டியதோடு இலங்கை அரசுமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி காட்டியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கர்நாடக அரசு பல அணைகளை கட்டியபோது தி.மு.க. வேடிக்கைப் பார்த்ததை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புள்ளி விவரங்களுடன் விளக்கியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மொத்தத்தில் புள்ளி விவரங்களின் முன்னோடி மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். எது எப்படியோ, “உண்ட வீட்டுக்கு ரெண்டகம்” நினைக்கும் திரு. எடப்பாடி பழனிசாமியின் துரோகச் செயல் தொடர்கிறது. தனது செயல்பாட்டின் மூலம் மாண்புமிகு அம்மா அவர்களை சிறுமைப்படுத்தியுள்ள திரு. எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வெட்கக்கேடானது. இந்தத் துரோகக் கூட்டம் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.