"மக்கள் வெளியே வர வேண்டாம்... புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலார்ட்"- ஆட்சியர் எச்சரிக்கை
புதுச்சேரி மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம். வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15ந் தேதி முதல் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. அவ்வப்போது மழையும் பெய்தது. இதனிடேயே வங்க கடலில் அக்டோபர் 27ந் தேதி மோந்தா புயல் உருவானது. இந்த புயல் புதுவையை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இருப்பினும், புதுவை மற்றும் புதுவையை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் கன மழை பெய்தது. புதுவையிலும் கன மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது.
அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. புதுவையில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது. நவம்பர் மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால், இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. நேற்றைய தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இன்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதோடு வானம் இருண்டு காணப்படுகிறது. சூரிய வெளிச்சம் வரவில்லை.

இதனிடையே பருவ மழையின் தொடர்ச்சியாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கன மற்றும் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் புதுவை பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிகௌகை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும் தேவை இருந்தாலன்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுருத்தி உள்ளது.மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின் பற்றுமாறு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். புகார்களை இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 9488981070 என்கிற எண்ணில் வாட்சப் தகவல் ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


