"சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்" - தமிழக அரசுக்கு கோரிக்கை!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்ட நிலையில் 40 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தூய்மை பணிகள் விரைவாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை எனவும் நேரடி அல்லது ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிக மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள அக்கூட்டமைப்பின் தலைவர் அருணன், நாளை முதல் பள்ளிகள் திறப்பது வரவேற்கக்கூடியது .ஆனால் பல அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் அரசுப்பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை உள்ளது. இந்த வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது சிரமம் உண்டாக்கும் ஒன்றாக இருக்கும். இதன் காரணமாக அதிகமான மாணவர்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.