ரேஷன் கடைகளில் கியுஆர் ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு
Updated: Jan 29, 2022, 21:52 IST1643473361385
தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் பயோமெட்ரிக் கருவி மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, குடும்ப தலைவரோ அல்லது உறுப்பினரில் ஒருவரோ கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கைரேகை பதிவு இயந்திரங்கள் அவ்வப்போது இயங்காமல் சில நேரங்களில் கோளாறு செய்வதுண்டு. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை சரியான நேரத்தில் வாங்கி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் கியுஆர் ஸ்கேன் செய்து வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.