"லஞ்சம் கொடுத்தா நான் பொறுப்பில்ல" - வைரலாகும் போஸ்டர்... இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடிக்கும் மக்கள்!
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் ஆனந்த தாண்டவன். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு காவல் நிலையத்திற்கு இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சரவணன் என்பவர் புதிய ஆய்வாளராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின் நிலையத்திற்கு வெளியில் போர்டு ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘‘ யா.ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பி. சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதில்லை.
என் பெயரை சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்துத் தருவதாக கூறி, யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்கவேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என தெரிவிக்கிறேன்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போர்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை எந்த காவல் அதிகாரியும் இம்மாதிரியான போர்டு வைத்ததே இல்லை. இதனால் சரவணனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், "காவல் நிலையங்களில் லஞ்சம் ஒழிப்பு பலகையை வைக்க லட்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்களில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் தனது பெயரை குறிப்பிட்டு வைத்திருக்கிறார். இதில் தவறு இல்லை. நேர்மறையான செயல்தான்” என்று கூறியுள்ளார்.