நெல் கொள்முதல் விலை உயர்வு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

 
நெல் கொள்முதல்

நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

ரூ.9 கோடி செலவில் 25 உழவர் சந்தைகள் மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பூச்சிகளை பற்றிய புரிதல் இருந்தால் தான் அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த முடியும். ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும்.  காவிரி படுகை பெருந்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும் . நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ.75, சன்ன ரகத்திற்கு ரூ.100 கூடுதலாக வழங்கப்படும் . 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.