பழனிசாமியின் நினைப்பு பெட்டி மீது தான் இருக்கு - முதல்வர் ஸ்டாலின்..!!
எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
2 நாள் பயணமாக தஞ்சைக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ரூ.1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது தஞ்சை மாவட்ட மக்களுக்கு 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. பூதலூர் வட்டத்தில் உயர் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் மதகுகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
2. தென் பெரம்பூர் அருகே வெள்ளாறு மற்றும் வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படும்.
3. ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரை கல்லணை கால்வாய் சாலை ரூபாய் 40 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
தொடந்து விழா மேடயில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மாமன்னர் ராஜராஜன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும் போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக காவிரி டெல்டா பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடுகிறோம். மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த நேரத்தில் நேரில் வந்து திறந்து வைத்த முதலமைச்சர் நான் தான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
காவிரியின் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது திமுக தான். தஞ்சையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது; காவிரி நீரை பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அந்த வரிசையில் தான் நானும் டெல்டாக்காரன் என்கிற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்துள்ளேன்.
2024 இல் ரூ.70 கோடியில் மினி டைட்டில் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் - மன்னார்குடி சாலை பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி விவசாயிகளுக்காக கார்- குறுவை சொர்ணவாரி பருவத்துக்கான சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படும்.

செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. உட்க்கட்சி பிரச்சனை மற்றும் கூட்டணிப் பிரச்சனையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார். திமுக வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது இது பழனிசாமிக்கு தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் பெட்டிச் சாவி தொலைந்து விட்டதா? என பழனிசாமி கேட்கிறார். அவர் நினைப்பு பெட்டியில் தான் இருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் ஆர்.என்.ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை; தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழகம் மசோதாவை பேரவையில் நிறைவேற்றி 40 நாட்களாக ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித்துறை அமைச்சரை சந்திக்க நேரம் தராமல் இழுத்தடிக்கிறார்.” என்று தெரிவித்தார்.


