மகன் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் தற்கொலை

 
Suicide

கிருஷ்ணகிரி அருகே, மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சரவணன் (50), கீதா(45) தம்பதியர். இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித்குமார் (25) துணி வியாபாரி. இவர், எதிர்வீட்டில் வசித்த பழனி, முருகம்மாள் தம்பதியின் மகள் தீபிகா, (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். தீபிகா எம்.எஸ்.சி., பட்டதாரி. ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். தீபிகா படித்து வேலையில் இருப்பதாலும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்வர்கள் என்பதாலும், இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சித்குமாரும், தீபிகாவும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தீபிகாவின் பெற்றோர் ரஞ்சித்குமார் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு, தங்கள் மகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மகனிடம் எவ்வளவு கூறியும், கேட்காமல் திருமணம் செய்த வருத்தத்தில் இருந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் இன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். மகன் காதல் திருமணம் செய்த விரக்தியில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.