விநாயகருக்கு பூஜை செய்யும் கிளிகள்..
திருப்பூரில் விநாயகருக்கு இரண்டு கிளிகள் பூக்களால் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு அருகே புதுராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் இவருக்கு கிருத்திகா தேவி என்கிற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சாய்ஸ்ரீ என்கிற மகள் இருக்கிறார். இந்த தம்பதி வீட்டில் 2 கிளிகளை வளர்த்து வருகிறார்கள். அந்த இரண்டு கிளிகளுக்கும் அவர்களது மகள் பேசவும், பாடவும் பயிற்சி அளித்திருக்கிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 2 தினங்களுக்கு முன்னர்,
வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். குடும்பத்தினர் பூஜை செய்வதை பார்த்த 2 கிளிகளும், தாங்களாகவே பூக்களை கிள்ளி விநாயகருக்கு போட்டு அர்ச்சனை செய்திருக்கின்றன. கிளிகளின் இந்த செயல் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டின் முன்பு நோய் பாதிப்பால் நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்தி வளர்த்து வந்ததாகவும், அதன்பின் எங்கே வெளியே சென்றாலும் கிளி தானாக வீட்டுக்கு வந்து விடும் என்கிறார் சாய்ஸ்ரீ. அதன்பின்னர் இன்னொரு கிளியையும் வாங்கி வளர்த்து வந்ததாகவும், இரு கிளிகளுக்கும் பேசவும், பாடவும் பயிற்சியளித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் குடும்பத்தினருடன் வீட்டிலேயே பூஜைகள் செய்து வருவோம் என்று கூறிய சாய்ஸ்ரீ, விநாயகர் சதுர்த்தி அன்று நாங்கள் வழிபடுவதை பார்த்து இரு கிளிகளும் பூக்களை விநாயகர் மீது தூவி போட்டு அர்ச்சனை செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டுகூட இதேபோல் கிருத்திகா தேவி வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு கிளி விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்ததாக ஒரு வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.