விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.. 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம் என சுதந்திர தின விழாவில் 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெலியிட்டார்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, தலைசால் தமிழர் விருது, சிறந்த சேவைக்கான விருது, காவலர்கள் விருது, சிறந்த மாநகராட்சிக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சுதந்திர தின சிறப்பு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை, “
** விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும்.
** விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,000 என உயர்த்தப்படும்.

** கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோரின் வழிந்தோன்றளுக்கு நிதி உதவி ரூ.11,000 என உயர்த்தி வழங்கப்படும்.
** 2-ம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் நிதி ரூ.8,000 என உயர்த்தி வழங்கப்படும்.
** முன்னாள் படை வீரர்களின் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33,000 சதுர அடி பரப்பில் ரூ.22 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்படும்.
** 2-ம் உலகப் போரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.15,000 என உயர்த்தி வழங்கப்படும்.
**ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.
** மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவு செய்யப்படும்.
**தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.” என்றும், இந்த 9 அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.


