"அரசின் விருது பெற்ற பெ.சண்முகம், சுபவீ உள்ளிட்ட செயல்பாட்டாளர்கள்" - முத்தரசன் வாழ்த்து
2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது” மற்றும் “டாக்டர் அம்பேத்கர் விருதினை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு முத்தரசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாழ்வில் உள்ள அரசியல், கலை, இலக்கியத்துறையில் சமூக செயல்பாட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மறைந்த தலைவர்கள் பெயரில் விருது வழங்கி, அவர்களை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுடன், பொதுவாழ்வில் உள்ளவர்களை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
இதன்படி, நடப்பாண்டில் (2023) இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்திய கமிட்டி உறுப்பினர் பெ.சண்முகம், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன், தந்தை பெரியார் விருதுக்கும் கவிஞர் பழநி பாரதி, மகாகவி பாரதியார் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் பாவேந்தன் பாரதிதாசன், அய்யன் திருவள்ளுவர், பெருந்தலைவர் காமராஜர், திரு.வி.க. பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் பெயர்களில் உள்ள விருது பெறுவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய மலைவாழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் உறுதி காட்டி செயல்பட்டவர். கல்லூரி பயின்ற காலத்தில் இருந்து இடதுசாரி அரசியல் களத்தில் முழு நேர ஊழியராக செயல்பட்டு வருப்பவர் பெ.சண்முகம்.
இதேபோல் திராவிட இயக்க குடும்பத்தில் இரண்டாம் தலைமுறையாக பகுத்தறிவு கொள்கை பிடிப்போடு, திராவிடர் தமிழ் தேசிய சிந்தனையாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மதவாத, சனாதானக் கருத்துக்களுக்கு எதிராக சமரசம் காணாத, கருத்துப் போராட்டத்தில் முன் நிற்பவர். இவர்களுடன் விருது பெற்ற அனைவரும் சிறப்பாக பொது வாழ்வு மேற்கொண்டு வருபவர்கள். அரசின் விருது பெற்ற அனைவருக்கும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன், பொருத்தமானவர்களை விருதுக்கு தேர்வு செய்து ஊக்கப்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை குறிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன் முயற்சிகளை பாராட்டி வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.