தொலைக்காட்சி, யூடியூப் நேர்காணலில் பங்கேற்க அனுமதி பெறனும்.. காவல் துறையினருக்கு பறந்த அதிரடி உத்தரவு..
சமூக வலைதளங்களில் சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் காவல்துறையினர் சீருடையுடன் சமூக வலைதலங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும். தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற்றே பேச வேண்டும் எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்குகள் பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்க்காணலின்போது காவல்துறை அதிகாரிகள் பகிர வேண்டாம் எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சீருடையில் தான் சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் காவல்துறையினர் பங்கேற்பதாகவும், அப்படி பங்கேற்கும் போது பல பரபரப்பான தகவல்களை பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ள டிஜிபி சங்கர் ஜிவால், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக அகில இந்திய பணிகள் நடத்தை விதிகளின் படி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக காவல்துறை உயர் அதிகாரிகள் இதனை பின்பற்றி தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும், அனைவரும் இந்த உத்தரவினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


