மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு..!!

 
மதுரை ஆதீனம் மதுரை ஆதீனம்


விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் மதுரை ஆதினத்தின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம்,  தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும்,  இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்ததோடு, தாடி வைத்திருந்தனர் என்றும் கூறியிருந்தார். ஆதினத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதோடு, சர்ச்சையாகவும் வெடித்தது.  

மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்
   
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதினம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  மதுரை ஆதினத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனையடுத்து  சென்னை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தினார்.  ஆதின மடத்தில் வைத்து சுமார் ஒரு மணிநேரம் , சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அவரிடம் 40க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.  

இந்நிலையில் மதுரை ஆதினத்தின் முன் ஜாமீனை ரத்துச்செயக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மதுரை ஆதினம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறி அவரது முன் ஜாமினை ரத்து செய்ய கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் தலைமையில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.