“மீண்டும் தவறி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தால் உதயநிதி ஸ்டாலின் முதல்வராவார்”- பியூஸ் கோயல்
மீண்டும் தவறி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தால் உதயநிதி ஸ்டாலின் முதல்வராவார் என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், “ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பாரதிய ஜனசங் கட்சியை உருவாக்கினார்கள். வாஜ்பாயின் தலைமையில் ஏப்ரல் 6 1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. கட்சி டெல்லியில் உருவானாலும் கட்சியின் முக்கிய முதல் ஆலோசனைக் கூட்டம் எனது சொந்த ஊரான மும்பையில் நடந்தது. அப்போது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிறைவுக்கு வந்தது அதே நிலைமைதான் தமிழகத்திலும் உள்ளது. துரதிஷ்டவசமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மக்கள் வேதனையில் உள்ளதை பார்க்க முடிகிறது. தமிழக அரசின் தோல்வியால் அரசின் அனைத்து துறைகளிலும் பெரும் ஊழல் நடந்துள்ளது. மதுபானம், நிலம், மணல், மின்சாரம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது.
மீண்டும் தவறி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தால் உதயநிதி ஸ்டாலின் முதல்வராவார். ஸ்டாலினின் குடும்பமான ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சபரீசன் உள்ளிட்டவர்களின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது இவர்களை தவிர வேறு எந்த திமுக தலைவர்களாலும் முன்னுக்கு வர முடியாது. தமிழக மக்கள் உதயநிதி ஸ்டாலினை அடுத்த முதலமைச்சர் ஆக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குடும்ப ஆட்சியை நடைமுறைக்கு கொண்டு வரவே உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்கினார் ஸ்டாலின். தவறான ஆட்சியை ஸ்டாலினின் குடும்பம் தமிழகத்திற்கு வழங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு சரியான ஆட்சியை வழங்கும். அதிமுக ஆட்சிக்கு வரும்போது மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கும். பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நல்ல தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் கிடைக்கும்” என்றார்.

