படைப்பாற்றல் மிக்க இயக்குநராக விளங்கியவர் கே.விஸ்வநாத் - பிரதமர் மோடி இரங்கல்

 
modi

பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மூத்த கலைஞரும் பழம்பெரும் இயக்குனருமான கே. விஸ்வநாத் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. ஒளிப்பதிவாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கே விஸ்வநாத் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான சங்கராபரணம் ,சலங்கை ஒலி,  சிப்பிக்குள் முத்து, ஸ்வர்ண கமலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர், இதுவரை 53 படங்களை இயக்கியுள்ள இவர், ஐந்து தேசிய விருதுகள், ஏழு நந்தி மாநில விருதுகள், பத்து தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்,  ஒரு இந்தி பிலிம் பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாரிக் குவித்துள்ளார் . அத்துடன் இந்திய சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகெப்  பால்கே விருதையும் இவர் பெற்றுள்ளார். அத்துடன் பல திரைப்படங்களில் குணசித்திர  கதாபாத்திரத்திலும் விஸ்வநாத் நடித்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். 

அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. சினிமா உலகில் தனெக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டவர், படைப்பாற்றல் மிக்க இயக்குநர், பன்முகத் திறமை கொண்டவர் கே.விஸ்வநாத். பல்வேறு கருப்பொருள்களில் அவரது படங்கள் பல தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்தன. இன்று அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.