"யாரும் உங்களை மறக்கமாட்டோம்" - நாகசாமி மறைவால் பிரதமர் மோடி வேதனை!
முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி (91) சென்னையில் நேற்று காலமானார். தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் முதல் இயக்குனராக பணியாற்றியவர் நாகசாமி. சமஸ்கிருத வித்துவான் ராமச்சந்திரனுக்கு 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இவர் பிறந்தார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர். மேலும் டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.
இதன்மூலம் தொல்லியல் துறையில் பல்வேறு பங்களிப்பையும் செய்திருக்கிறார். மத்திய தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி மேற்கொண்ட நாகசாமி, 1959ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியாற்றினார். அதேபோல 1963ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார். இதன் பின்னர் 1966ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.
இவருக்கு 2018ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் ஆர்.நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள். வரலாறு & தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.