மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி... - அண்ணாமலை அறிவிப்பு...

 
பிரதமர் மோடி


மதுரையில் ஜனவரி 12 ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக  அக்கட்சியின் மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி மாதம் 12 ம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது.

மோடி

இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி  அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.  இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில பொதுச்செயலாளர் திரு.கரு. நாகராஜன் அவர்கள் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்,.

அண்ணாமலை அறிக்கை

மேலும்  மாநில அளவிலான குழுவில் இடம்பெற்றுள்ள 12 பேரின் பட்டியலையும்,  தூத்துக்குடி, திருநெல்வேலி,  தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர் கொண்ட வரவேற்பு குழுவின் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடிருக்கிறார்.

ஜனவரி 12 ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் தமிழகம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.