சட்டப்பிரிவு 370 தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி

 
pm modi

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என்று நாங்கள் கருதுகிறோம். 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது.  குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது. இந்தியாவுடன் இணையும் போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை. காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை.  இந்தியாவுடன் இணைந்த போது இந்தியாவிடமே காஷ்மீர் இறையாண்மை இருந்தது. மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை. காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை. எனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.  


இந்த நிலையில், தீர்ப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது. இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பு.  இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல,  இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.