எங்களுடைய உட்கட்சிப் பிரச்சனை நீங்க யாரும் பேசக்கூடாது; நாங்கள் பேசிக்கொள்கிறோம்: அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நேற்று (டிச 28) கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று (டிச 29) தைலாபுரம் இல்லத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒரு மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கட்சி பொதுக்குழு கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடப்பது சகஜம்தான். எங்களுக்கு எல்லாம் ஐயா தான், எல்லா கட்சியிலும் நடந்ததுபோல நேற்றைய தினம் நடந்தது. இந்தாண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு பாமகவின் வளர்ச்சிப் பணிகள் நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன் . 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து குழுவாக பேசினோம். கட்சியின் வளர்ச்சி, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் பேசினேன்.
பாமக ஒரு ஜனநாயக கட்சி, காரசாரமான விவாதம் நடப்பது இயல்பு. எங்களுடைய கட்சி ஜனநாயக கட்சி, எங்களுடைய உட்கட்சிப் பிரச்சனைப் பற்றி ஊடகங்கள் பேசவேண்டியதில்லை. பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது” என்றார்.


