ஆன்லைன் சூதாட்டம் - எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறது தமிழக அரசு?

 
Online Rummy - Anbumani Ramadoss

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க புதிய தடை சட்டம், மேல்முறையீடு என்ற இரண்டில் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது.

rummy

சென்னையில் கடந்த 30-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்படும்’’ என்று கூறியிருந்தார். அதை வரவேற்று அடுத்த நாள் அறிக்கை வெளியிட்ட நான், அடுத்து சட்டப் பேரவை கூடும் வரை காத்திருக்காமல், உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலின் சூடு தணிவதற்கு முன்பாகவே, புதுக்கோட்டையில்  செய்தியாளர்களைச் சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, ‘‘ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அதில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்று விளக்கமளித்துள்ளார்.

anbumani

தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையில், ஒரே வாரத்தில் திங்கள்கிழமை ஓர் அமைச்சர் ஒரு நிலைப்பாட்டையும், சனிக்கிழமை இன்னொரு அமைச்சர் இன்னொரு நிலைப்பாட்டையும் தெரிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்ட போதே, ‘‘இது வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், இது தடுமாற்றமாகி விடக்கூடாது’’ என்று கூறியிருந்தேன். எதிர்பார்த்ததைப் போலவே இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. இது சரியல்ல. ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகளை தமிழக அரசும் மறுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனரே காணொலி மூலம் மக்களை எச்சரித்திருக்கிறார். இத்தகைய சூழலில் உடனடியாக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கனிடமிருந்து மக்களைக் காக்கும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரிக்கப்படும் என்றே தெரியாத மேல்முறையீட்டை நம்பிக் கொண்டிருப்பது ஆன்லைன் சூதாட்ட அத்துமீறல்களை அனுமதிப்பதற்கு சமமானதாகும்.

anbumani

எனவே, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க புதிய தடை சட்டம், மேல்முறையீடு என்ற இரண்டில் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மேல்முறையீடு தான் தமிழக அரசின் விருப்பம் என்றால், அதன் பாதகங்களை உணர்ந்து, அதற்கு பதிலாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.