12ஆம் வகுப்புத் தேர்வா... நீட் தேர்வா... எதில் கவனம் செலுத்துவது? அன்புமணி கேள்வி!!

 
pmk

நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

neet
தமிழகத்திற்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் நீட் தேர்விலிருந்து  விலக்கு கேட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்றுமுதல் தொடங்கிவிட்டது. தமிழ் , ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் 543 மையங்களில் வெளிநாடுகளில் 14 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 


இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , "தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை! 2022-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கி விட்டது. அதனால், தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது! நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பதை விட இது மிகவும் மோசமான நிலையாகும்.  

anbumani

12-ஆம் வகுப்புத் தேர்வா... நீட் தேர்வா... எதில் கவனம் செலுத்துவது என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டும். அது எந்தத் தேர்விலும் கவனம் செலுத்த விடாமல் செய்து விடக் கூடும்! இந்தக் குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராமப்புற ஏழை மாணவர்கள் தான். நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக நீட் விலக்கு பெற சாத்தியமுண்டா? என்பதையும் மாணவர் நலன் கருதி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்! " என்று பதிவிட்டுள்ளார்.