தமிழ்நாட்டு மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவே இல்லையா?

 
fisher

இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்: பாம்பன் துறைமுக மீனவர்கள் போராட்டம்!

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது. அந்த வகையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர்,  அவர்கள்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 பேரை சிறை பிடித்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்த இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் . கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் . அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

மீனவர்கள்

 ஏற்கனவே கடந்த 8ஆம் தேதி 11 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை  கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று போராட்டத்தை விடுத்து, மீண்டும் கடலுக்கு சென்ற நிலையில் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த சம்பவத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய ,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், "வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது; இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது! ஜனவரி 31-ஆம் தேதி 21 பேர், பிப்ரவரி 8-ஆம் தேதி 11 பேர், இன்று 12 பேர் என கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது! இன்று கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை  மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்! " என்று  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.