புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் - அன்புமணி அறிவிப்பு

 
pmk

புதிய  நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

tn

தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது . இங்கு தற்போது பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவை ஏற்பட்டுள்ளதன் காரணமாக,  புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்  நாட்டினார்.ரூ. 970 கோடி ரூபாய் செலவில் நான்குமாடிக்கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  மக்களவையில் 888 பேரும் , மாநிலங்களவையில் 300க்கும் மேற்பட்டோரும் அமரும் வகையிலும் ,  இரு அவை பங்கேற்கும் கூட்டுக் கூட்டத்தின் போது 1280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் இந்த கட்டிடம் வசதி படைத்ததாக கட்டப்பட்டுள்ளது.  வருகிற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 



புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ்  உள்ளிட்ட 19 கட்சிகள்  அறிவித்துள்ளன. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய  நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்." என்று பதிவிட்டுள்ளார்.