முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு .!!

 
Q Q

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் நடந்த போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பே சியதாவது: ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அங்கு இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் கண்டிக்கின்றனர். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அரசு இதனைத் தடுக்க வேண்டும். வரும் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் தீர்மானம் கொண்டுவரப்படும். தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் இத்தீர்மானத்தை அனைத்துக் கட்சிகள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். காசாவில் தாக்குதல் கண்மூடித் தனமானது. பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் மனப்பூர்வ ஆதரவு அளிக்கும். மனித உயிர்களை காக்க வேண்டியது நமது கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்க வேண்டும். காசாவில் அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். உணவுப்பொருட்களுக்கு காத்திருந்தவர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர். இது என்னுடைய இதயத்தை நொறுக்கியது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

 

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் இந்த அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

"காசாவில் நிகழும்
இனப்படுகொலைகளுக்கு எதிராகத்
தமிழ்நாடு சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்படும்
என்பது ஒரு நற்செய்தியாகும்;
நம்பிக்கை தருவதாகும்
காசாவின்
உலர்ந்த வானத்தில் பெய்யும்
தமிழ்நாட்டு மழையாகும்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின்
மனிதாபிமானத்தை
மனம் உள்ளவர்களெல்லாம்
பாராட்டுவார்கள்
காசா ஒரு சிறு பகுதிதான்
41 கி.மீ நீளமும்
10 கி. மீ அகலமும் கொண்ட
ஓர் ஒட்டு நிலம்தான்
ஆனால்,
தண்ணீர் இல்லாத
அந்தப் பாலை நிலத்தில்
ரத்த ஊற்று பீறிடுகிறது
உலகத்தின் கண்களில் விழுந்த
கந்தகத் தூளாக
அது உறுத்திக்கொண்டே இருக்கிறது
முதலில் அந்த மக்கள்
உயிரோடு இருக்க வேண்டும்
இந்தத் தீர்மானம்
சர்வதேசச் சமூகத்தின் மீது
தமிழ்நாடு சட்டமன்றம் காட்டும்
அன்பென்றும் அக்கறையென்றும்
போற்றப்படும்
தீப்பிடித்த வீட்டில்
ஆளுக்கொரு குடம் தண்ணீர்
அள்ளி இறைப்பதுபோல
அனைத்துக் கட்சிகளும்
இந்தத் தீர்மானத்தை
ஆதரிக்கும் என்று நம்புகிறோம்
இது
உலக சமாதானத்துக்கு
எங்கள் பங்கு
மத்திய கிழக்கை நோக்கி
எங்கள் வெள்ளைப் புறா"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது