மன அழுத்தத்தை குறைக்க காவல்துறை பல்வேறு முயற்சி எடுக்கிறது - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு..

 
dgp sylendra babu

காவல்துறை  மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சென்னை சைக்ளிஸ்ட்ஸ் (Chennai cyclists) அமைப்பு நடத்தும் ‘சென்னை மிதிவண்டி திருவிழா ’ CHENNAI CYCLING THIRUVIZHA)" நடைபெற்றது. இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சென்னையில் வசிக்கும் மக்கள் இங்கு வருகை தந்து சைக்கிள் திருவிழாவை பார்க்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்த்து சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் இளைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மன அழுத்தத்தை குறைக்க காவல்துறை பல்வேறு முயற்சி எடுக்கிறது - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு..

 தொடர்ந்து டிஐஜி தற்கொலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கோவை சரக டிஐஜி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மன அழுத்தத்தில் இருந்ததை தெரிந்து முன்கூட்டியே அதற்கான சிகிச்சைகளை எடுத்துள்ள போதிலும் இதுபோன்று நடந்துள்ளது கவலை தருகிறது. காவல்துறையினருக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை காவல்துறை தொடர்ந்து எடுத்து வருகிறது. காவல் துறையை சார்ந்தவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மனநல பயிற்சியாளர்களாகவும் அவர்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள் மற்ற காவலர்களுக்கு மன அழுத்ததில் இருந்து விடுபடுவது குறித்த பயிற்சிகளை அளிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.